காஷ்மீரில் 'சட்டசபை தேர்தலை நடத்த சாதகமான சூழ்நிலை' - தேர்தல் கமிஷனர் தகவல்

Image Courtacy: ANI
ஜம்மு காஷ்மீரின் வாக்குப்பதிவு நிலவரம், அனைத்து வாக்காளர்களையும், வாக்குப்பதிவு மையத்துக்கு வரவழைத்துள்ளதை காட்டுவதாக தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அங்கு சட்டசபை தேர்தலுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாநில தேர்தல் கமிஷனர் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் சுக்லா, "ஜம்மு காஷ்மீரின் வாக்குப்பதிவு நிலவரம், அனைத்து வாக்காளர்களையும், வாக்குப்பதிவு மையத்துக்கு வரவழைத்துள்ளதை காட்டுகிறது. மொத்த யூனியன் பிரதேசத்திலும் 5 தொகுதிகளில் சராசரியாக 58.46 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.
ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் அனந்த்நாக்-ரஜோரி தொகுதிகளில் முறையே 38.39 சதவீதம், 59.1 மற்றும் 54.84 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும். மற்ற இரண்டு தொகுதிகளான உதம்பூர் மற்றும் ஜம்முவில் முறையே 68.27 சதவீதம், 72.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அவர்களின் வாக்குப்பதிவு ஆர்வம், சட்டமன்றத் தேர்தலுக்கு மிகப் பெரிய சாதகமாக உள்ளது. விரைவில் தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்கான பணியை தொடங்கும்.
இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து ஜனநாயகத்தை தழுவியிருப்பதை இது பிரதிபலிக்கிறது. அனைத்து தொகுதிகளிலும், 59 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 80 சதவீதம் இருப்பதும் ஒரு முற்போக்கான அம்சமாகும். அதிகமாக வாக்குகள் பதிவானது நேர்மறையான மற்றும் மனநிறைவு தரும் வளர்ச்சியாகும்" என்று அவர் கூறினார்.






