குளிர்காலத்தில் மூலிகை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

குளிர்காலத்தில் சூடாக டீ, காபி பருகுவதற்கு மாற்றாக மசாலா டீ, கிரீன் டீ, லெமன் டீ, இஞ்சி டீ அல்லது வேறு ஏதேனும் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

சளி - இருமலை எதிர்த்துப் போராடும்: குளிர்காலத்தில் சளி, இருமல் ஏற்படும் சமயத்தில் சூடான தேநீர் பருகுவது இதமளிக்கும். இருப்பினும் மூலிகை தேநீர் சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்த உதவும்.

இஞ்சி, மஞ்சள் சேர்க்கப்பட்ட டீ, லவங்கப்பட்டை கலந்த டீ பருகுவது மூக்கின் வீக்கத்தை தணித்து நாசிப்பாதைக்கு இதமளிக்கும். சளி அல்லது இருமல் அறிகுறிகளை போக்கவும் உதவும்.

செரிமானம் சீராக நடைபெறும்: குளிர்காலத்தில் எளிதில் ஜீரணமாகாத கடினமான உணவுகளை உண்பது, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, போன்ற காரணங்களால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனை தவிர்க்க இஞ்சி டீ, புதினா டீ, சோம்பு டீயை பருகலாம். இவை இரைப்பை, குடல் பாதிப்புகளை தடுக்கவும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும் உதவும்.

உடல் ஆற்றலை அதிகரிக்கும்: மூலிகை டீ, இயற்கையாகவே உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஊக்கியாக செயல்படுகிறது. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.

மூலிகை தேநீர் தவிர மற்ற பானங்களில் காபின் உள்ளடங்கி இருக்கும். அதனை அதிகம் நுகரும்போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அழற்சியை குறைக்கும்: ஏதேனும் ஒரு மூலிகை தேநீருடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து பருகலாம். கொதிக்கும் நீரில் சிறிதளவு கிராம்புகளை சேர்த்து, வடிகட்டி பருகலாம்.

இவை குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், உடல் வலியை குறைக்கவும் உதவும்.