போலீசார் அதிரடி நடவடிக்கை: புதுச்சேரியில் 76 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

புதுச்சேரியில் 76 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோரிமேட்டில் 3 பேரையும், ஒதியஞ்சாலையில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அதிரடி நடவடிக்கை: புதுச்சேரியில் 76 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மதுபானத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். தற்போது இங்கு கஞ்சா விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க புதுவை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இருப்பினும் போலீசாருக்கு போக்குக்காட்டி விட்டு கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

இந்தநிலையில் கதிர்காமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகரை சேர்ந்த அருண் (வயது 30), சாரம் காந்தி நகர் பிரித்திவிராஜ் (23), சண்முகாபுரம் அண்ணா தெரு ராஜ்குமார் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் புதுவை முழுவதும் விற்பனை செய்வதற்காக 72 கிலோ கஞ்சா பொட்டலங்களை ஞானதியாகு நகரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா அனைத்தும் ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தி வரப்பட்டதாகும்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கோரிமேடு போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் ஆகியோர் பாராட்டினார்கள்.

இதேபோல் புதுவை முல்லா வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் நகரை சேர்ந்த கவுதம் (24) என்பவரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான கவுதமிடம் இருந்து 1.85 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com