

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 40). இவர் குன்னம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். ஜாபர் அலி நேற்று அதிகாலை பணி முடிந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோட்டில் வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வடக்கு மாதவி காட்டுக்கொட்டாயை சேர்ந்த அத்தியப்பன் (60) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இதனை கண்ட ஜாபர் அலி, அத்தியப்பனிடம் லிப்ட் கேட்டு, அவரது மோட்டார் சைக்கிளில் ஏறினார். இதையடுத்து சிறிது தூரம் செல்வதற்குள் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜாபர் அலி படுகாயமடைந்தார். அத்தியப்பனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து சிகிச்சைக்காக ஜாபர் அலி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.