

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மேதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலியானார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மயிலம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அவர் பணியை முடித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். தளிஅள்ளி அருகே சென்றபோது வேலம்பட்டியில் இருந்து வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயம் அடைந்தார்.
பரிதாப சாவு
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.