

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்வதற்குரிய உரிமத்திற்கான ஏலத்தில், ஏலத்தொகை அதிகமாக உள்ளது என்று கூறி யாரும் ஏலம் கோராததால் ஏலம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற5ம்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 23ம்தேதி வரை நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி உடுமலையில் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டைத்திடலில் தற்காலிக கடைகள்அமைக்கப்படும். அதில் ராட்டினம், மேஜிக் ஷோ உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக குட்டைத்திடலில் 91 சென்ட் நிலப்பரப்பில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்வதற்குரிய உரிமத்திற்கான ஏலம்கடந்தமாதம் மார்ச் 26ம்தேதிநடப்பதாக இருந்தது.ஆனால் இந்த பொது ஏலம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட ஏலம் நேற்று நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், ஏலத்திற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.58 லட்சத்தில் 4ல்1 பங்கு தொகையான ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சாரத் தொகையாக, ஏலம் நடைபெறுவதற்கு முன்பு வங்கி வரைவோலையாக தாலுகா அலுவலகத்தில் செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒத்திவைப்பு
இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஏலம் நடத்துவதற்கான பணிகள் நடந்தன. தாசில்தார் கணேசன் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் தனித்தாசில்தார் தயானந்தன், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏலத்தில், அச்சாரத்தொகைக்கான வங்கிவரை வோலையை 4 பேர் மட்டுமே செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போது அரசு சார்பில் குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.58 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஏலம் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதற்கு, ஏலத்தில் கலந்து கொண்டவர்கள், அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஏலத்தொகை அதிகமாக உள்ளதாகவும், அதை குறைக்ககோரியும் வலியுறுத்தி, யாரும் ஏலம் கோரவில்லை.இதைத்தொடர்ந்து ஏலத்தொகையை குறைக்க இயலாது என்று கூறி, ஏலம் ஒத்தி வைக்கப்பட்டு, ஏலம் நாளை சனிக்கிழமை காலை11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.