

துறையூர்
துறையூர் ஆலமரம் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு வழிப்பாதையில் ஆலமரத்தடியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரகவி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.