

இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞராக திகழ்பவர் பாடலாசிரியர் அஸ்மின். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கவிஞர் அஸ்மின் எழுதிய இரங்கல் கவிதையான வானே இடிந்ததம்மா என்ற சோகப்பாடல் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான நான் திரைப்படத்தில் இடம்பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடல் மூலம் அஸ்மின் அறிமுகமானார். அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களுக்கான பாடல்களை எழுதியுள்ள அஸ்மின், தனது யூடியூப் சானலின் வாயிலாக ஏராளமன தனியிசைப் பாடல்களையும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தை வரவேற்கும் வகையில் ரஜினிக்கான என்ட்ரி சாங் பாணியில் வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த - நீ இனிமேலும் முடியாது ஏமாத்த என்னும் பாடலை அஸ்மின் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து மேலும் சிலருடன் பாடியுள்ள இந்த வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த' பாடல் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.