நாகை கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பௌர்ணமி தின சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

கோரக்க சித்தர் ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
நாகை கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பௌர்ணமி தின சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

தமிழக சித்த பரம்பரையில் நவநாத சித்தர்களில் ஒருவராகவும், முதன்மையான 18 சித்தர்களில் ஒருவராகவும் விளங்குபவர் கோரக்க சித்தர். போகரின் ஆலோசனைப்படி, நாகை வடக்குப் பொய்கைநல்லூரில் தவமிருந்து வந்த கோரக்கர், ஐப்பசி பரணி நட்சத்திர தினத்தன்று ஜீவ சமாதி அடைந்தார் என்பது சித்தர் ஆசிரம வரலாற்றில் கூறப்படுகிறது.

அவரது ஜீவ சமாதி அமைந்துள்ள வடக்கு பொய்கைநல்லூர் ஆசிரமத்தில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். அதேபோல சிவனடியார்கள், சாதுக்களும் வருகின்றனர்.

பொதுவாக பௌர்ணமி நாட்களில் இந்த ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி நேற்று கோரக்க சித்தர் ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சித்தர் ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆசிரம நிர்வாக அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தம் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com