40 ஆண்டுகளுக்கு பிறகு பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை திறப்பு

ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Puri Jagannath temple Ratna Bhandar
Published on

பூரி:

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தின் ஆபரணங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பொக்கிஷ அறை 40 ஆண்டுகளுக்குப் பின் இன்று திறக்கப்பட்டது.

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் (ரத்ன பந்தர்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரிய ஆபரணங்கள், மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறை கடைசியாக 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு நகைகள் கணக்கெடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் 1985-ல் பொக்கிஷ அறையை திறந்தனர். ஆனால் அறையின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், பாம்புகள் போன்ற ஆபத்தான பூச்சிகள் சூழ்ந்திருந்ததாலும் பெட்டிகளைதிறந்து நகைகளை கணக்கெடுக்க முடியாமல் போனது.

இந்நிலையில், பொக்கிஷ அறையின் நகைகளை கணக்கிடுவதற்காக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பொக்கிஷ அறையை திறக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி குழுவின் உறுப்பினர்கள் இன்று மதியம் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் பொக்கிஷ அறையை திறந்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பொக்கிஷ அறை திறக்கப்பட்டபோது முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத், ஜெகநாதர் கோவில் தலைமை நிர்வாகி அரபிந்த பதி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி. கடநாயக் மற்றும் பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.

பொக்கிஷ அறையில் உள்ள இரண்டு பகுதிகளில் உள்ள பெட்டிகளில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பொக்கிற அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் பொக்கிஷ அறையின் நிலை மோசமாக இருப்பதால், முதலில் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றும், அதன்பின்னர் பெட்டிகளை திறந்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி.கடநாயக் கூறி உள்ளார். பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு நிறைந்த வேறு ஒரு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) மாற்றப்படும். அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள: https://x.com/dinathanthi

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com