சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முற்றுகை

காஞ்சீபுரம் மாவட்டம், சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முற்றுகை
Published on

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து சுவர் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த பத்மநாபன், மோகன், சக்திவேல், ரவி, ஜெயராமன் உள்பட 9 பேரை மாமல்லபுரம் போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் திடீரென குழிப்பாந்தண்டலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், இந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், தாங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் சுடுகாட்டு சாலையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரவேண்டும், சுடுகாட்டில் இருந்த அரிச்சந்திரன் சிலையை அகற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் சையத்அலி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்ப்கெடர் கன்னியப்பன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்து செல்வதாக வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை ராதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எச்சூர் குமரேசன், நெம்மேலி நாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முற்றுகை போராட்டத்தையொட்டி அங்கு பதற்றநிலை ஏற்பட்டதால் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிரஞ்சீவி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com