

வேலாயுதம்பாளையம்
சேறும், சகதியுமான சாலை
கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், வாங்கல், நெரூர் பஞ்சாமதேவி உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம், வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.இந்த அலுவலகத்திற்கு வரும் சாலை மண் சாலையாக உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக இந்த மண் சாலை பல நாட்களாக மிகவும் சேறும் சகதியுமாக உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது சற்றில் வாகனங்களின் சக்கரங்கள் சிக்கி கொள்கின்றன.
பலர் இந்த சாலையில் நடந்து செல்லும்போது வழுக்கி சேற்றில் விழுந்துள்ளனர். எனவே உடனடியாக சேறும் சகதியுமாக உள்ள இந்த சாலையை சீரமைத்து, தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.