

சிதம்பரம்,
அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்ப்பு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஓதுக்கீடு ரத்து செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை அறிந்ததும் பா.ம.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள மெயின் ரோட்டில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். இதற்கு மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாநில விவசாய அணி சஞ்சீவி, பி.கே.அருள், நகர செயலாளர்கள் வக்கீல் ராஜவேல், திலிப் ராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வாசு, மாவட்ட நிர்வாகிகள் ராஜா, கமல்ராஜ், இளையராஜா, திருமூர்த்தி ராஜன், ஆறுமுகம், நிர்வாகி பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சேத்தியாத்தோப்பு
இதேபோல் சேத்தியாத்தோப்பு சென்னை-கும்பகோணம் சாலையில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராசு தலைமையில் பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் அசோக், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் சங்கர், மோகன், மணியரசன், நகர நிர்வாகிகள் ஜெய்சங்கர், கலைமணி, இளங்கோவன், ராஜேஷ், பிரபு, கார்த்தி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.