

மும்பை,
பஸ் விபத்தில் உடல் ஊனமடைந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
விளையாட்டு பயிற்சியாளர்
சோலாப்பூர் மோகால் பகுதியை சேர்ந்தவர் ஓம்கார் செண்டே (வயது24). இவர் தனியார் நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந்தேதி புனே-சோலாப்பூர் சாலையில் சொகுசு பஸ்சில் பயணம் செய்தார். டவுண்ட் பகுதியில் வந்த போது மற்றொரு பஸ் மீது சொகுசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓம்கார் செண்டே பலத்த காயமடைந்தார். புனேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதற்காக ரூ.3 லட்சம் செலவானது. இருப்பினும் 60 சதவீதம் உடல் ஊனமானது. இதனால் தனக்கு இழப்பீடு தருமாறு பஸ் உரிமையாளரிடம் முறையிட்டார்.
ரூ.30 லட்சம் இழப்பீடு
இதற்கு அவர் தர மறுத்ததால் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், விபத்தில் உடல் ஊனமடைந்த மனுதாரர் மாதந்தோறும் பெற்று வந்த ரூ.20 ஆயிரம் வருமானத்தை இழந்து உள்ளார். இதனால் அவருக்கு இழப்பீடு வழங்குமாறு வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம். வாலி முகமது விபத்திற்கு காரணமான பஸ் உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனம் இணைந்து மனுதாரர் தாக்கல் செய்த நாளில் இருந்து 7 சதவீத வட்டியுடன் ரூ.30 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டார்.