ரூ.1 கோடி மதிப்பிலான 100 லோடு ஆற்று மணல் பறிமுதல்

ரூ.1 கோடி மதிப்பிலான 100 லோடு ஆற்று மணல் பறிமுதல்

ஒசநகர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 100 லோடு ஆற்று மணலை பறிமுதல் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Published on

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் அருகே ஹரித்ராவதி கிராமத்தில் உள்ள ஷராவதி நீர்தேக்க பகுதியில் மணல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே, ஒசநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அந்தப்பகுதியில் ஆற்று மணல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 லோடு மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இந்த மணல் பதுக்கல் தொடர்பாக ஹரித்ராவதி கிராமத்தை சேர்ந்த சுரேந்திரா, அருணா, மோக்ஷேகவுடா, விஜயேந்திரா, கணேஷ், வாசு, சந்தோஷ், மஞ்சுப்பா, குமார், பட்டே மல்லப்பா கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், தயாகர், பாபு கவுடா, சந்திரகுமார், உதயஷெட்டி, நாகராஜ ஷெட்டி ஆகிய 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இவர்கள் அந்தப்பகுதியில் ஓடும் ஆற்றில் மணலை கடத்தி, ஹரித்ராவதி பகுதியில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com