

சேலம்,
சேலம் மாநகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையான சேலம்பெங்களூரு பைபாஸ் அமைந்துள்ளது. சீலநாயக்கன்பட்டி பைபாசில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக சென்று வருகிறது. அதாவது, மேம்பாலம் வழியாக ஆத்தூர், சென்னை மற்றும் நாமக்கல், மதுரை, கரூர், திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் சென்று விடுகின்றன. குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே பாலத்திற்குகீழ் உள்ள சாலையில் சென்று வருகின்றன.
அதே வேளையில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் ஏதும் இல்லை. அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், கொண்டலாம்பட்டி பைபாசில் இருந்தும் ஈரோடு, சங்ககிரி, திருப்பூர், கோவைக்கு பட்டர்பிளை பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அந்த ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டுத்தான் செல்கின்றன. மேலும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதி 200 அடி சுற்றளவு கொண்டதாக உள்ளதால், கனரக வாகனங்கள் அதை கடந்து செல்ல பெரும் சிரமப்பட்டு வந்தன. குறிப்பாக ராட்சத காற்றாலைக்கு பயன்படும் இறக்கைகளை கனரக வாகனங்களில் எடுத்து செல்லும்போது கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் எளிதாக திரும்ப முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
சுற்றளவு 150 அடி குறைப்பு
எனவே, கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் அனைத்து வாகனங்களும் எளிதாக சென்று வரும் வகையில் 200 அடி சுற்றளவு கொண்ட ரவுண்டானாவில் 50 அடிக்கு சுற்றளவை குறைத்து 150 அடியாக மாற்றும் முயற்சி நேற்று மாநகர போலீஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
பொக்லைன் எந்திரம் மூலம் ரவுண்டானாவின் சுற்றளவை அகற்றி, அதன் இடிபாடுகள் உடனடியாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அந்த பணி இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக முடிவடைந்து விடும் என்றும், அதன் பிறகு மீண்டும் ரவுண்டானா அழகுப்படுத்தப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.