மண்டபம் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகளை சுங்க இலாகாவினர் கைப்பற்றினர்.
மண்டபம் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
Published on

பனைக்குளம்,

கடலோர பகுதிகளில் இருந்து தங்கம், டீசல் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகாவுக்கு அடிக்கடி ரகசிய தகவல்கள் கிடைத்து வந்தன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கடலோர போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார், சுங்க இலாகாவினர், மத்திய அரசுக்கு சொந்தமான கடலோர காவல்படையினர் இரவு நேரங்களில் மண்டபம், பாம்பன், உச்சிப்புளி, ராமேசுவரம், புதுமடம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக இலங்கையில் இருந்து சமீபகாலமாக தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் கைதுசெய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக சுங்க இலாகாவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராமநாதபுரம் சுங்க இலாகா உதவி ஆணையர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பன்னீர்செல்வம், முனியசாமி, பிரேம்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று சோதனையில் செய்தனர். அப்போது வேதாளை குறவன்தோப்பு பகுதியில் ஒரு நாட்டுப்படகு நிறுத்தி வைத்திருப்பதை கண்ட சுங்க இலாகாவினர் அந்த படகை சோதனையிட்டனர். அதில் 10 மூடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட உயர் ரக கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து படகையும், அதில் இருந்த கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் உடனடியாக அவற்றை ராமநாதபுரம் சுங்க இலாகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு? தொடர்பு உள்ளது. இந்த அட்டைகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com