சங்கராபரணி ஆற்றங்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
வில்லியனூர்
திருக்காஞ்சி மகாபுஷ்கரணி விழாவையொட்டி சங்கராபரணி ஆற்றங்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு நடத்தினார்.
மகாபுஷ்கரணி விழா
வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் வரும் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முதல் மே மாதம் 3-ந் தேதிவரை மகாபுஷ்கரணி விழா நடக்கிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யவும், சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியை ஆய்வு செய்யவும் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மேலும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரும் அங்கு வந்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிலை சுற்றி உள்ள இடங்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழித்தடங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கார் பார்க்கிங், இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பக்தர்கள் பாதுகாப்பாக வந்து சங்கராபரணி ஆற்றங்கரையில் நீராடவும், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. போலீஸ் உதவி மையம், சுகாதார உதவி மையம், உள்ளாட்சித் துறை உதவி மையம் உள்ளிட்டவை நிரந்தரமாக அமைக்கவும், வருவாய்த்துறை மூலம் இதனை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆய்வின்போது வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் மின்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

