தர்மபுரி மாவட்டம் முழுவதும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 98 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடத்திய வாகன தணிக்கையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 98 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடத்திய வாகன தணிக்கையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், ராஜ்குமார், வெங்கிடுசாமி, குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,453 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 401 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன.

குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதிக ஆட்களை ஏற்றி சென்றது உள்ளிட்ட வாகன விதிமுறைகளை மீறியதாக 363 வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அபராதம் விதித்தனர்.

அபராதம்

இந்த வாகன சோதனையில் அரசுக்கு சாலை வரியாக ரூ.20 லட்சத்து 39 ஆயிரத்து 728-ம், இணக்க கட்டணமாக ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 250-ம் என மொத்தம் ரூ.25 லட்சத்து 86 ஆயிரத்து 978 அபராதமாக உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 324 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சோதனையின் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.33 லட்சத்து 98 ஆயிரத்து 302 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தொப்பூர் கணவாய் பகுதியில் அதிவேகமாக இயக்கிய 60 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com