போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டி: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு 2-ம் பரிசு

போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் 2-ம் பரிசு பெற்றார். கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டி: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு 2-ம் பரிசு
Published on

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் தமிழக போலீஸ்துறையின் செயலாக்கம் பிரிவின் சார்பில் சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் என 536 போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முதல் 3 இடங்களை...

துப்பாக்கிசுடும் திறன் போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 20 போலீஸ் அதிகாரிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். சமீபத்தில் இறுதிபோட்டி நடைபெற்றது. 10 அடி, 15 அடி மற்றும் 20 அடி தூரத்தில் நின்று இலக்கை குறி பார்த்து சுடும் வகையில் இறுதிப்போட்டி நடந்தது.

இதில் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர்(தலைமையிடம்) ஏ.அமல்ராஜ், கிண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமி ஆகியோர் முதல் பரிசையும், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 2-வது பரிசையும், இணை கமிஷனர் (கிழக்கு மண்டலம்) ஆர்.சுதாகர் 3-வது பரிசையும் பெற்றனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி.(செயலாக்கம்) ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ஜெயச்சந்திரன் உள்பட போலீஸ் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com