

பாகூர்,
இணைப்பு கல்லூரி
ஏம்பலம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதிதாசன் கல்லூரியின் இணைப்பு கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டார்.
தொடர்ந்து கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் தேர்வு செய்தார். பின்னர் சேலியமேடு வாணிதாசனார் உயர்நிலைப்பள்ளி கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கந்தசாமி, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது கல்வித்துறை இயக்குனர் குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.