

மும்பை,
அமராவதி மாவட்டத்தில் உள்ள அச்சல்பூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. பச்சு கடு. இவர் கடந்த 2018-ம் ஆண்டு போட்டி தேர்வு இணையதளங்கள் தொடர்ச்சியாக செயலிழந்து வருவதை எதிர்த்து மாணவர்களுடன் மராட்டிய தலைமை செயலகமான மந்திராலாயவில் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது மந்திராலயாவில் உள்ள அரசு அதிகாரிகளை தாக்கியதுடன், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அறைக்குள் அத்துமீறி நுழைத்து அவரிடம் தவறாக நடத்து கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. பச்சு கடுவுக்கு எதிராக மெரின் டிரைவ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது ஊழியர்களை கடமையை செய்யவிடாமல் தடுத்தல், அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி எம்.எல்.ஏ. பச்சு கடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து அவர் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டை அணுகினார். இவரது ஜாமீன் மனு குறித்து பதிலளித்த அரசு தரப்பு, எம்.எல்.ஏ.க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதி ஆர்.என். ரோகடே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.