# அறிவியல் - தூக்கம் நல்லது


# அறிவியல் - தூக்கம் நல்லது
x

மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட வைத்தால், அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மதியம் ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் அன்று காலை வகுப்பில் படித்த பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

40 சிறுவர்களிடம் மாசாசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த தொடர் பரிசோதனை மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டதாம். குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்த பின்னர் அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிக்கிறதாம். குழந்தைகளின் நினைவாற்றலை உறுதிப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் பார்த்துக் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மதிய நேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவு சொல்கிறது.

இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற குழந்தைகள் தூங்கும்போது, அவர்களின் மூளையில் கற்றலுக்குப் பொறுப்பான பகுதிகள் வேகமாக செயல்படுவதையும் கண்டறிந்தனர். தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை மருத்துவரீதியில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரெபேக்கா ஸ்பென்ஸர்.

மழலை வயதில் குழந்தைகள் இயற்கையாகவே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலிருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை, பகுத்துப் பார்த்து, சேமித்து வைத்துக் கொள்வதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 11 முதல் 13 மணி நேர தூக்கம் அவசியம். எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்கிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.

மதியம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும் எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் சொல்கிறார்.

மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் பார்த்துக் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மதிய நேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவு சொல்கிறது.


Next Story