தமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்


தமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
x

பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.

கேள்வி: தமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? (தே.மாதவராஜ், கோவை)

பதில்: இந்தி உள்பட எந்த மொழியையும் படிப்பதில் தவறு இல்லை. திணிப்பு என்று வரும்போது தான் தவறு தலையெடுக்கிறது.

கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது பற்றி... (மணலி மாறன், திருச்சி)

பதில்: இளஞ்சிறார்களுக்கு பசிப்பிணி போக்கும் அற்புதமான திட்டம்.

கேள்வி: வாழ்க்கையில் உண்மையான வெற்றி எது? (சா.சொக்கலிங்கம், ரோஸ்மியாபுரம்)

பதில்: வாழ்க்கையின் வெற்றியை நாம் வாழ்ந்து முடிக்கும்போதுதான் கணிக்க முடியும்.

கேள்வி: மதுரையில் பல கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு பற்றி... (ராமதாஸ், ரங்கநாதபுரம், விழுப்புரம்)

பதில்: நினைத்ததை நடத்திக் காட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கேள்வி: எங்கள் பகுதியில் நடைப்பயிற்சி செய்யும் போது வயதானவர் ஒருவர் தன் மனைவியை அணைத்துக் கொண்டு நடக்கிறார். இந்த வயதிலுமா இப்படி? (சோம சேகர், சென்னை-41)

பதில்: அது காமத்திலான அணைப்பாக இருக்காது. தன் மனைவி தடுமாறி விழுந்துவிடக் கூடாது என்ற பாசத்தாலான எச்சரிக்கை அணைப்பு. அதை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி: எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. என் வருங்கால கணவர், இப்போதே எல்லாவற்றையும் செய்து பழகலாமே என்று ஆசையுடன் சொல்கிறார். எனக்கும் ஆசை வார்த்தை காட்டுகிறார். நான் என்ன செய்யவேண்டும்? (வனலட்சுமி, கோவை)

பதில்: நீங்களும் இதே ஆசை வார்த்தைகளோடு, 'ஆக்கப் பொறுத்தவர் கொஞ்சம் ஆறப் பொறுங்கள். திருமணத்துக்கு பிறகு நீங்கள் இதை கேட்கவே வேண்டாம். நானே தருவேன்', என்று சொல்லிவிடுங்கள்.

கேள்வி: பெண்கள் விண்வெளிக்கே சவால் விடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறாரே? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: உண்மைதான். தமிழக பெண் விஞ்ஞானிகள் வளர்மதி, வனிதா முத்தையா, நிகர் ஷாஜி அதை நிரூபித்து விட்டார்கள்.

கேள்வி: அச்சு ஊடகம் - காட்சி ஊடகம். என்ன வித்தியாசம்? (ஸ்டீபன்ராஜ், மார்த்தாண்டபுரம், புதுக்கோட்டை)

பதில்: அச்சு ஊடகம் கற்பனை செய்ய வைக்கும். காட்சி ஊடகம் கண் முன்னே நிறுத்தும்.

கேள்வி: பா.ஜ.க. தலைவர்களிடம் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்த ரஜினிகாந்திடம் ஓ.பன்னீர்செல்வம் உதவிகேட்டதாக சொல்லப்படுகிறதே? (இல.கண்ணன், நங்கவள்ளி)

பதில்: ரஜினிகாந்த், கழுவுற மீனில் நழுவுகிற மீன். அவரிடம் யாருடைய பாச்சாவும் பலிக்காது.

கேள்வி: எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண் உள்ளாடை தெரியும் வகையில் உடை அணிந்து வருகிறார். வேலையே ஓடமாட்டேன் என்கிறது. (வேணுகோபால், சென்னை-31)

பதில்: உங்களை மாதிரி ஜொள்ளு பார்ட்டியை சுண்டி இழுக்கத்தான் அவ்வாறு உடை அணிகிறார். அந்தப்பக்கம் பார்க்காதீர்கள். உடை மாறிவிடும்.

கேள்வி: கோவிலுக்கு வரும் இளம்பெண்களில் சிலர் 'டி-சர்ட்', 'லெக்கின்ஸ்' போன்ற கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து வருவதால் என் போன்ற மூத்த குடிமகன்களின் இறைபக்தி, கன்னி பக்தியாக மாறுவதென்பது ஏன்? (டி.கே.மோகன், பாளையங்கோட்டை)

பதில்: இறைவனை நெக்குருகி பார்க்க வேண்டிய உங்கள் கண்கள், கன்னிகளை பார்க்கிறது என்றால் உங்கள் பக்தியில் தான் கோளாறு.

கேள்வி: கோவிலுக்கு அழகு கோபுரம். கோபத்துக்கு எது அழகு? (ஜெ.மணிகண்டன், திரு.வி.க.நகர், பேரணாம்பட்டு)

பதில்: கோபத்துக்கு அழகு எது? கோர முகம் தான்.

கேள்வி: ஆண்களோ, பெண்களோ சில அந்தரங்க விஷயங்களை நண்பர்களிடம் சொல்வது சரியா? (எச்.பஹதூர், ஜமாலியா லைன்)

பதில்: அது தோழமையின் அடர்த்தியைப் பொறுத்தது.

கேள்வி: எனது தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் என்னிடம் சிரித்து சிரித்து பேசுகிறார். என் மேல் விழுந்து பரவசத்தையும் ஏற்படுத்துகிறார். நான் என்னதான் செய்ய? (மாரியப்பன், தென்காசி)

பதில்: எங்கேயோ இடிக்குதே.... சீறும் பாம்பை நம்புங்கள். ஆனால் சிரித்து சிரித்து மேலே விழும் பெண்ணை நம்பவேண்டாம்.


Next Story