

பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதனையொட்டி இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் குறித்து இங்கு காண்போம்...!
4 நகரங்களை பின்னுக்கு தள்ளி 29-வது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை சீன தலைநகர் பீஜிங் தன்வசப்படுத்தியது. புதிய ஸ்டேடியங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக சீன அரசு தாராளமாக செலவிட்டது. எனவே இது அதிக தொகை செலவிடப்பட்ட ஒலிம்பிக் போட்டியாக கருதப்படுகிறது. ஆசியாவில் நடந்த 3-வது ஒலிம்பிக் போட்டி (ஏற்கனவே ஜப்பான், தென்கொரியாவில் நடந்துள்ளது) இதுவாகும்.
2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் (8-24) அரங்கேறிய இந்த ஒலிம்பிக்கில் 204 நாடுகளை சேர்ந்த 10,942 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 28 விளையாட்டுகளில் 302 பந்தயங்கள் நடத்தப்பட்டன.
இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர்: இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக் மறக்க முடியாத ஒன்றாகும். இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் 700.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி ஒட்டு மொத்த தேசத்தையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.