நாடாளுமன்ற தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: கேரளாவில் 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: கேரளாவில் 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பாலக்காடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பாலம் அருகே உள்ள சுனாங்காட்டைச் சேர்ந்த சந்திரன் (68) என்பவர் வாணி விலாசினி பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.30 மணியளவில் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோழிக்கோடு நகர வாக்குச்சாவடி எண் 16-ஐ சேர்ந்த இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) பூத் ஏஜெண்டான அனீஸ் அகமது (66) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் சில நிமிடங்களுக்கு தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டது.

ஆலப்புழா தொகுதியின் காக்காஜோம் சுசாந்த் பவனில் வசிக்கும் சோமராஜன் (70) என்ற முதியவர் ஆலப்புழாவில் உள்ள அம்பலப்புழாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த ஆசிரியர் சித்திக் (63) என்பவர் நிறைமருதூர் அருகே உள்ள வல்லிக்கஞ்சிரம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com