ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார் - ஜே.பி.நட்டா

மத்தியில், பயங்கரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் அரசு அமைய மம்தா பானர்ஜி விரும்புகிறார் என்று ஜே.பி.நட்டா கூறினார்.
ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார் - ஜே.பி.நட்டா
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் மத்தியில் வலுவான அரசு அமைவதன் அவசியத்தை பற்றி பேசுகிறோம். மம்தா பானர்ஜியோ பலவீனமான அரசை விரும்புகிறார். திருப்திப்படுத்தும் அரசியல், ஊழல், பாரபட்சம், பயங்கரவாதிகளிடம் மென்மையான அணுகுமுறை ஆகியவற்றை பின்பற்றும் அரசு அமைய அவர் விரும்புகிறார்.

மம்தா பானர்ஜி அரசு, ஊழல், பணம் பறிப்பு, திருப்திப்படுத்துதல், பாரபட்சம் ஆகியவற்றுக்கு பெயர் போனது. ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார். அதனால்தான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.

அவரது ஆட்சியின் ஆசிரியர் நியமன ஊழலால் சுமார் 26 ஆயிரம் பேர் வேலையிழந்து விட்டனர். ஊழலும், கொள்ளையும் அவரது அரசின் அன்றாட செயல்களாகி விட்டன. காங்கிரஸ் கட்சி, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளை பறிக்க விரும்புகிறது.

சந்தேஷ்காலியில் பெண்களிடம் பாலியல் வன்முறை மற்றும் நில அபகரிப்பில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கை பாதுகாக்க மம்தா பானர்ஜி முயன்றார். ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் பெண்கள் துன்புறுத்தப்பட்டது போன்ற வெட்கக்கேடு வேறு எதுவும் இல்லை. மம்தா ஆட்சியில் தாய்மார்களோ, சகோதரிகளோ பாதுகாப்பாக இல்லை. சந்தேஷ்காலி சம்பவம் இதயத்தை உலுக்குவதாக உள்ளது" என்று ஜே.பி.நட்டா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com