கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கைவிரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்

பா.ஜ.க. பிரமுகர் துரை ராமலிங்கம் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.
கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கைவிரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்
Published on

கோவை,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள் முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55).கடலூர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர். இவர், கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு திரட்ட 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். துரை ராமலிங்கம் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் இவர் பிரசாரத்தை முடித்தார். அப்போது அவர் கோவை தொகுதியில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்து கொண்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

இது குறித்து துரை ராமலிங்கம் கூறுகையில், நான் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பா.ஜ.க. கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்றார்.

அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. பிரமுகர் கைவிரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com