'பா.ஜனதா அரசில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம்' - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

50 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு, பா.ஜனதா நாட்டு மக்களின் ஆதரவுடன் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
'பா.ஜனதா அரசில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம்' - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவாக, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்த பெண்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை வேப்பேரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, "பா.ஜனதாவின் தொடக்க தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு, பா.ஜனதா நாட்டு மக்களின் ஆதரவுடன் வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டில் தற்போது வாரிசு அரசியல் தலை தூக்கி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வாரிசு அரசியல் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறது. கழிவறை இல்லா வீடுகளில் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜனதா அரசு 2047-ம் ஆண்டிக்குள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு அதற்கான வலுவான திட்டங்களை வகுத்து வருகிறது. 'இந்தியா' கூட்டணி ஒரே கொள்கையுடன் தேர்தலை சந்திக்காமல் மாநிலங்களுக்கு, மாநிலம் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை மாற்றிக் கொண்டு தேர்தலை சந்திக்கின்றனர். அவர்களுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com