கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் - செல்வப்பெருந்தகை சாடல்

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் - செல்வப்பெருந்தகை சாடல்
Published on

சென்னை,

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 30ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் 30ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அன்று மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30ம் தேதி மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். அவர் இரவு பகலாக தியானம் செய்ய உள்ளார். 30ம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் பிரதமர் மோடி ஜூன் 1ம் தேதி மாலை நிறைவு செய்கிறார். 3 நாட்கள் அவர் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மே 30 முதல் ஜூன் 1ம் தேதி வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அதில் செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com