ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: "இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை" - நயினார் நாகேந்திரன்

தன்னை பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை,

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்காக அவருக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவு செய்து தாம்பரம் போலீசா சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை என்று நெல்லையில் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எனக்கு எவ்வித சம்மனும் வரவில்லை. பா.ஜனதா கட்சிக்கு நெல்லை தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. நான் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 3 அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதனை காவல்துறையினர் தடுக்கவில்லை. ஆனால் எனது வாகனத்தில் பிரசாரத்திற்கு செல்லும் போது தினம் மூன்று முறை சோதனை செய்கிறார்கள். பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுகிறார்கள். இதனால் தான் நான் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

எனக்கு எந்தவித மன அழுத்தமும் இல்லை. எங்களது வணிக வளாகத்தில் தேர்தல் அலுவலகம் சரியான இடத்தில் தான் உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் அம்பை கூட்டத்தில் நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com