

விசாகப்பட்டினம்,
இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர்.
இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதமும், (10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள்) 154 பந்துகளில் சதமும் நிறைவு செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது.
இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் (ரன்ரேட் 3.41) சேர்த்து இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
இதன்பின்பு தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இந்தியாவின் மயங்க் அகர்வால் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். அவர் 204 பந்துகளில் (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) 100 ரன்களை எடுத்துள்ளார். 75 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 264 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது.