

சென்னை,
ஐ.பி.எல். 2026 சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 2 நாட்களுக்குப் பிறகு மார்ச் 28-ந்தேதி தொடங்கப்படும் என்றும், மே 31-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக இந்த நேரத்தில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும்.
ஆனால் நடப்பாண்டி தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எல்எஸ்ஜி அணிக்கு சொந்தமான மைதானங்களை கொண்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், இன்னும் போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, 2009, 2014, 2019 மற்றும் 2024 முதலிய ஆண்டுகளில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றபோதெல்லாம், ஐபிஎல் தொடரின் தேதி அட்டவணை இரண்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.
இந்தசூழலில் இந்த முறையும் அதே திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா, அல்லது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.