2-வது டி20: இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் வீசிய ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ் (46 ரன்கள்) அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிம் டேவிட் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் ஜோஷ் இங்லிஸ் (20 ரன்கள்), மிட்செல் ஓவன் (14 ரன்கள்) ஆகியோரின் கணிசமான ஒத்துழைப்புடன் ஆஸ்திரேலிய அணி வெறும் 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது.






