தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விளையாடுவாரா..?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி கவுகாத்தியில் தொடங்க உள்ளது.
முன்னதாக முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான வலியால் பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் சுப்மன் கில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் அந்த போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவர் 2-வது இன்னிங்சில் பேட் செய்யவில்லை.
இந்த நிலையில் சுப்மன் கில் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் அவரால் உடனடியாக விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி நாளை கவுகாத்திக்கு புறப்படுகிறது. அவர்களுடன் சுப்மன் கில் பயணிக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






