2-வது டெஸ்ட்: ரபடா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் பாலோ ஆன் ஆன வங்காளதேசம்

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

சட்டோகிராம்,

தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் டோனி சி ஜோர்சி (141 ரன்கள்) ஸ்டப்ஸ் (106 ரன்கள்) மற்றும் முல்டர் (105 ரன்கள்) மூவரும் சதம் அடித்து அசத்தினர். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 6 ரன்னுடனும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ரபடா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம், தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 159 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மொமினுல் 82 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் 2-வது இன்னிங்சில் தொடர்ந்து வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com