இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: டி காக் அதிரடி சதம்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
image courtesy:twitter/@ProteasMenCSA
image courtesy:twitter/@ProteasMenCSA
Published on

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிக்கல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன குயின்டன் டி காக் உடன் கேப்டன் பவுமா கை கோர்த்தார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டியது.

2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பவுமா 48 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கே 24 ரன்களிலும், மார்க்ரம் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா காலி செய்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் டி காக் சிறப்பாக ஆடினார். இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 80 பந்துகளில் சதம் விளாசினார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவர் போல்டானார். 89 பந்துகளில் 106 ரன்கள் அடித்த நிலையில் டி காக் அவுட்டானார்.

தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்துள்ளது. பிரெவிஸ் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com