5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை...ஆனாலும் வெற்றி - இந்திய அணியை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, 5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. டாஸ் வெல்லவில்லை. முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலை. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி வென்ற இந்திய அணி பாராட்டுக்கு தகுதியானது.

இது மிகவும் கவரக்கூடிய டெஸ்ட் வெற்றியாகும். இந்த தொடரில் நிறைய இளம் இந்திய வீரர்கள் விளையாடினர். அவர்கள் நீண்ட காலம் விளையாடுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com