இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க அதிரடி நடவடிக்கை.. 2.5 மடங்கு ஊதிய உயர்வு

வீரர்களுக்கு நிகரான ஊதியத்தை வீராங்கனைகளும் பெறும் வகையில் பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கான கட்டணம் இரண்டு மடங்கிற்கும் (ஏறக்குறைய 2.5 மடங்கு) மேலாக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டி தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் பெறுவார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இதே போல் உள்ளூர் டி20 போட்டிகளில் களம் காணும் சீனியர் வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500-ம் அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைளுக்கு ஒருநாள் போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், டி20 போட்டிக்கு ரூ.12,500-ம் வழங்கப்பட உள்ளது. வீரர்களுக்கு நிகரான ஊதியத்தை வீராங்கனைகளும் பெறும் வகையில் பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளது.






