

கொல்கத்தா,
இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அணியின் முக்கிய நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது அம்பலமானதால், முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதை ஈடுகட்டும் வகையில் கடந்த ஆண்டு குஜராத் லயன்ஸ், புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகள் உதயமாகின. சென்னை, ராஜஸ்தான் அணிகளில் அங்கம் வகித்த வீரர்களில் பெரும்பாலானோர் புதிய அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர்.
புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மகேந்திர சிங் டோனி நியமிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்சின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த டோனியால், புனே அணியில் சாதிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு புனே அணி 14 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 9 தோல்வியுடன் அடுத்த சுற்றை வாய்ப்பை இழந்து வெளியேறியது. பங்கேற்ற 8 அணிகளில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், அந்த அணி நிர்வாகம் அதிருப்திக்குள்ளானது.
இதையடுத்து, கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், புனே அணி நிர்வாகம் அணியின் பெயரையும் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ண்ட்ஸ் என்பதில் இருந்து ரைசிங் புனே சூப்பர்ஜெய்ண்ட்(Rising Pune Supergaints to Rising pune Supergaint) என மாற்றியுள்ளது.