வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் 72 ரன்களும் (41 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), இவின் லீவிஸ் 43 ரன்களும் விளாசினர். வெஸ்ட்இண்டீஸ் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. 2 மணி நேரம் பாதிப்புக்குள்ளானதால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. நிகோலஸ் பூரன் 30 ரன்களும், ஹெட்மயர் 25 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 10 ரன்னிலும், அடுத்து வந்த ரிஷாப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமலும், கடந்த ஆட்டங்களில் சொதப்பிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 36 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 12.4 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்து திணறியது.

4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 26.1 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 212 ரன்னாக இருந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் (65 ரன்கள், 41 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கெமார் ரோச் பந்து வீச்சில் ஜாசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 120 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து கேதர் ஜாதவ் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 94 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் அடித்த 43-வது சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அவரது 9-வது சதம் இது. முந்தைய ஆட்டத்திலும் விராட்கோலி சதம் அடித்து இருந்தார்.

இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி 99 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 114 ரன்னும், கேதர் ஜாதவ் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். விராட்கோலி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், 2 ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து பேட்டிங் செய்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடிய விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடி அணியை வெற்றி பெற வைப்பதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுப்பேன். அதனை தான் ஸ்ரேயாஸ் அய்யரும் செய்தார். நெருக்கடிக்கு மத்தியில் அவர் துணிச்சலாக விளையாடினார். இதேபோல் செயல்பட்டால் அவர் மிடில் வரிசையில் நிரந்தமாக இடம் பிடித்து விடுவார். இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சற்று நெருக்கடி இருந்தது. ஸ்ரேயாஸ் இன்னிங்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவர் சிறப்பாக செயல்பட்டு எனக்கு இருந்த நெருக்கடியை போக்கினார். இந்த ஆட்டம் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றார்.

தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில் நாங்கள் நல்ல தொடக்கம் கண்டோம். ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது. மழை பெய்த பிறகு ஈரப்பதம் இருந்ததால் நாங்கள் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. விராட்கோலி (11 ரன்னில்) கொடுத்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டோம். அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது. எல்லா சிறப்பும் அவரது பேட்டிங்குக்கே சாரும் என்றார்.

ஸ்கோர் போர்டு - வெஸ்ட் இண்டீஸ்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com