4 விக்கெட்டுகளில் இருந்த ஆகாஷ் தீப்... சிராஜ் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சி சம்பவம்

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
இந்த இன்னிங்சின் ஒரு கட்டத்தில் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். இந்த சூழலில் 90-வது ஓவரின் முதல் பந்தில் ஜோஷ் டாங்கின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் 5 விக்கெட்டுகளை பதிவு செய்தார்.
அந்த தருணத்தில் ஆகாஷ் தீப்பிடம் சென்ற சிராஜ், ' நீங்கள் (ஆகாஷ் தீப்) 5 விக்கெட் கைப்பற்றுவதற்காக மீதமுள்ள பந்துகளை (அந்த ஓவரில்) வெளியில் வீசி விடவா?' என்று கேட்டுள்ளார். அதற்கு ஆகாஷ் தீப் 'வேனாம். நீங்கள் எப்போதும் போல வீசுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் அந்த ஓவரின் 3-வது பந்திலேயே சிராஜ் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.