தவறுதலாக பந்தில் எச்சிலை தடவிய அமித் மிஷ்ரா; நடுவர் எச்சரிக்கை

தவறுதலாக பந்தில் எச்சிலை தடவியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ராவுக்கு நடுவரின் எச்சரிக்கை விடப்பட்டது.
தவறுதலாக பந்தில் எச்சிலை தடவிய அமித் மிஷ்ரா; நடுவர் எச்சரிக்கை
Published on

ஆமதாபாத்,

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நடந்த 22வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடின.

டெல்லி அணியில் அஸ்வின் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் நவ்தீப் சைனி, டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ரஜத் படிதர், டேனியல் சாம்ஸ் இடம் பெற்றனர்.

டாஸ் வெற்றி பெற்ற டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்துவீசுவது என முடிவு மேற்கொண்டார். இதன்படி பெங்களூரு முதலில் பேட் செய்தது. டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா 6வது ஓவரை வீசினார்.

போட்டியில் அவர் முதலில் பந்து வீசுவதற்கு முன் பந்தில் எச்சிலால் தடவினார். இதனால் கள நடுவரான வீரேந்தர் சர்மா டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட்டுக்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதற்கு முன் தங்களுடைய எச்சிலால் பந்தில் தடவி விட்டு பின்னர் பந்து வீசுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு பந்தில் எச்சில் தடவுவதற்கு கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது.

இதற்கான விதிகளை மீறும் வீரர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடப்படும். இதே தவறு மீண்டும் தொடருமென்றால், தவறை செய்த வீரரின் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com