ஆஷஸ் தொடர்; ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது - ஸ்டீவ் ஸ்மித்

கோப்புப்படம்
ஒலிம்பிக் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் ப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன் என ஸ்மித் கூறியுள்ளார்.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 1 ஆட்டம் டிரா ஆனது. வழக்கமால இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த தொடரில் பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளங்கள் உள்ளன.
இதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். சில காலமாக இங்கிலாந்தில் ரன் குவிப்புக்கு ஏதுவான தட்டையான ஆடுகளங்களில் அவர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால், ஆஸ்திரேலியாவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்ப்பது கடினம். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அப்படித்தான் உள்ளது.
ஒலிம்பிக் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் ப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி வருகிறேன். நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததற்கும் இதுதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.






