ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று தொடக்கம்... முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மோதல்

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலகக்கோப்பை அடிப்படையில் மாற்றப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த தொடரில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.
இதில் முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.






