ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்த பாக்.


ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்த பாக்.
x
தினத்தந்தி 21 Sept 2025 6:49 AM IST (Updated: 21 Sept 2025 11:27 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் ‘சூப்பர்4’ சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக ‘டாஸ்’ போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது.

அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது. கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சினை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர்4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு பாகிஸ்தான் அணி தரப்பில் இருந்து நேற்று யாரும் வரவில்லை. இதற்கான காரணம் என்னெவென்று தெரியவில்லை. இந்திய அணியுடனான கைகுலுக்கல் சர்ச்சைக்கு பிறகு நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பையும் பாகிஸ்தான் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story