ஆசிய கோப்பை: இது விசித்திரமாக இருக்கிறது - ராபின் உத்தப்பா கருத்து


ஆசிய கோப்பை: இது விசித்திரமாக இருக்கிறது - ராபின் உத்தப்பா கருத்து
x

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். அந்த சூழலில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அந்த அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனைத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய அணி பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், ஐ.பி.எல். தொடரிலும் அசத்தினார். ஆனால் அவரை தேர்வு செய்யாமல் விட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆசிய கோப்பையில் கழற்றி விடப்பட்டுள்ளது விசித்திரமானது என இந்திய முன்னாள் வீரர் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா அடுத்த டி20 உலகக்கோப்பை விளையாடுவதற்கு முன் சுமார் 18 டி20 போட்டிகள் உள்ளன. அந்த போட்டிகளுக்கான இந்திய அணியில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் (ஸ்ரேயாஸ் ஐயர்), இல்லாதது விசித்திரமாக உள்ளது. ஆனால், அவர் விரைவில் இந்த அணியில் இடம்பெறுவார் என்று நம்பலாம். ஏனெனில் அவர் அதற்கு தகுதியானவர். ஆசிய கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படாததற்கான காரணம் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்!” என கூறினார்.

1 More update

Next Story