ஆசிய கோப்பை: இந்திய அணியின் துருப்புச்சீட்டு வீரர் இவர்தான் - இர்பான் பதான் கணிப்பு

ஆசிய கோப்பை தொடர் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை: இந்திய அணியின் துருப்புச்சீட்டு வீரர் இவர்தான் - இர்பான் பதான் கணிப்பு
Published on

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வரும் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. ஏனெனில் அந்த அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இருப்பார் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், பும்ராவைத் தவிர்த்து இன்னொரு துருப்புச்சீட்டு வீரரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பின்னர் ஹர்திக் மற்றும் அக்சர் என இரண்டு ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் வெற்றிக்கான துருப்புச்சீட்டை கொண்டு வருவார்கள் என்று நினைப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும்.

ஆனால் வருண் சக்ரவர்த்தி எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்க்க நான் ஆவலாக இருப்பேன், ஏனென்றால் அது அவருக்கு ஒரு மீட்பின் கதையாக இருக்கும். 2021 டி20 உலகக்கோப்பையில், அவர் சிறப்பாகச் செயல்படவில்லை என்று நினைக்கிறேன். வருண் சக்ரவர்த்தி மீதுதான் என் கவனம் இருக்கும். ஏனென்றால் அவர் இப்போது நல்ல பார்மில் இருக்கிறார், அவருக்கு நிறைய நம்பிக்கை உள்ளது, எனவே அவர் நிச்சயமாக அந்த துருப்புச்சீட்டை கொண்டு வர முடியும். நான் குறிப்பிட்ட அனைத்து பெயர்களிலிருந்தும் ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், வருண் சக்ரவர்த்தியை தேர்ந்தெடுப்பேன், ஏனென்றால் அவர் ஒரு பந்து வீச்சாளர் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com