ஆசிய கோப்பை தொடர்: இந்த ஆர்.சி.பி வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - ஸ்ரீகாந்த் கருத்து

image courtesy:PTI
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஆர்.சி.பி அணியின் முன்னணி வீரரான புவனேஷ்வர் குமாரை சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
புவனேஷ்வர் குமாரை கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம். தற்போது அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அவர் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அதற்கு முன்பு அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை, ஆனால், ஐ.பி.எல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.மக்கள் ஏன் அவரைப் பார்ப்பதில்லை என்று எனக்கு தெரியவில்லை. புவி ஒரு சிறந்த புதிய பந்துவீச்சாளர். புவனேஸ்வர் குமாரை தற்போது மிகவும் தீவிரமாக பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






