

லண்டன்,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி 10 அணிகளின் கேப்டன்களும் நேற்று முன்தினம் லண்டனில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து சிறிது நேரம் உரையாடினர். அப்போது உடன் இருந்த இளவரசர் ஹாரி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் இப்போது கசிந்துள்ளது. பிஞ்ச்சை நோக்கி ஹாரி, உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? இன்னுமா அணியில் இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தான் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு 32 வயதான ஆரோன் பிஞ்ச் சிரித்தபடி, 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறேன் என்று மட்டும் பதில் அளித்தார். இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு யாருக்கு? என்று ஹாரி திரும்ப திரும்ப கேட்ட போது பிஞ்ச் எரிச்சலுடன், இங்கிலாந்து, இந்தியா என்று கூறியபடி சென்றார். இளவரசர் ஹாரி இலங்கை கேப்டன் கருணாரத்னேவிடம், உற்சாகமாக இருங்கள். போட்டியை அனுபவித்து விளையாடுங்கள். இல்லாவிட்டால் இங்கு ஆடியே பிரயோஜனம் இல்லை என்றார்.
இதற்கிடையே இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து பேசியதை மையமாக வைத்து பல ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பதிவில், ராணியிடம் உள்ள கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு வாருங்கள் கோலி என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.